தமிழ்நாடு

tamil nadu

"தமிழக அமைச்சர்களுக்குத் தினந்தோறும் மத்திய அரசு மிரட்டல் விடுகிறது" - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 4:33 PM IST

Minister K.N.Nehru: தமிழக அமைச்சர்களுக்குத் தினந்தோறும் மத்திய அரசு மிரட்டல் விடுத்து வருவது அமைச்சராக இருக்கும் எங்களுக்குத் தான் தெரியும் என்று நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

Minister K N Nehru
அமைச்சர் கே என் நேரு

அமைச்சர் கே என் நேரு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "வாஜ்பாய் காலத்தில் திமுக ஆட்சியிலிருந்த போது தான் பொக்ரான் அணுக்குண்டு சோதனை செய்து மற்ற நாடுகள் பயப்படும் அளவிற்கு நம் நாட்டை பெருமைப் படுத்தினார். அதே வாஜ்பாய் கட்சியிலிருந்து வந்த மோடி 2014-ஆம் ஆண்டு அறிவித்து மதுரையில் 2019-ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்று வரை திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்ட ரூ.1900 கோடி நிதியைக் கேட்டால் மத்திய அரசு ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டுள்ளோம் வந்தவுடன் கட்டுவதாகச் சொல்கிறார்கள். எந்த விதத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அடிக்கல் நாட்டுடன் உள்ளது.

இதுமட்டும் அல்லாது, ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்; விவசாயிகளின் விளை பொருட்களுக்குத் தகுந்த விலை உருவாக்கப்படும் என்றெல்லாம் சொல்லி பாஜக ஆட்சிக்கு வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று அதற்கு மாறாக டெல்லியில் 5 மாநில விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் நிலையில் அவர்கள் மீது ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசுகிறார்கள். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு மோடி அரசு செவி சாய்க்கவில்லை.

மாநிலங்களுக்குத் தேவையானவற்றைச் செய்துதரக்கூறி முதலமைச்சர்களே டெல்லி சென்று போராடி வேண்டிய சூழ்நிலையில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது. சென்னை, தென் மாவட்டங்களில் பேரிடர் பாதிப்புக்கு எந்த நிதியும் மத்திய அரசு தரவில்லை.

தமிழக அரசு மத்திய அரசிற்கு 1 ரூபாய் வரியாகக் கொடுத்தால் 29 பைசா தான் மத்திய அரசு திருப்பி தருகிறது. ஆனால் 1 ரூபாய் வரி கொடுக்கும் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு 2 ரூபாய் 75 பைசா மத்திய அரசு வழங்குகிறது. இதே போன்று தமிழகத்தை விட மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதியுதவி வழங்குகிறது.

மேலும், ஆண்டுதோறும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாகத் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கிய நிலையில், கடந்த ஆண்டு முதல் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனால் கடனும் பெற முடியவில்லை. எப்படி ஆட்சி நடத்த முடியும்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ச்சியாகப் பேசிய அவர், "அமைச்சர்களுக்குத் தினந்தோறும் மத்திய அரசு மிரட்டல் விடுத்து வருவது அமைச்சராக இருக்கும் எங்களுக்குத் தான் தெரியும். இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி வந்தால் தமிழகத்தில் திமுக பங்கேற்கும் அரசாக இருப்பதால் நிறையத் திட்டங்கள் தமிழகத்திற்குக் கிடைக்கும்" என அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிவில் நீதிமன்ற நீதிபதியான விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன்... தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details