தமிழ்நாடு

tamil nadu

தொடரும் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: மத்திய அரசின் நடவடிக்கை என்ன? விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 3:29 PM IST

Tamilnadu fishermen news: தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பது தொடர்ந்து வரும் நிலையில் அதை தடுக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் கைது

சென்னை:கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி 22ஆம் தேதி சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோட்டுக்கொண்டார்.

மேலும், 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசுத் தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து, மீனவர்கள் சிறை பிடிப்பு நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்..

ABOUT THE AUTHOR

...view details