சென்னை:கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி 22ஆம் தேதி சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோட்டுக்கொண்டார்.
மேலும், 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.