தமிழ்நாடு

tamil nadu

"மே 2, 3ஆம் தேதிகளில் வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்" வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Tamil Nadu Weather report

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 4:28 PM IST

Updated : Apr 29, 2024, 5:55 PM IST

Tamil Nadu Weather Report : 2024 மே மாதம் 02 மற்றும் 03 ஆகிய 2 தினங்களுக்கு வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Nadu Weather Report
Tamil Nadu Weather Report

சென்னை:அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

அதிகபட்ச வெப்பநிலை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய தமிழக சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை 7 இடங்களில் 40.0 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 41.2 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.1 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.2 டிகிரி செல்சியஸ் மற்றும் சேலத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.இன்றைய வானிலை நிலவரம்

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 29ஆம் தேதி முதல் மே மாதம் 01ஆம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே போல, மே மாதம் 02ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மே மாதம் 03ஆம் தேதி முதல் 05ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: வரும் 29ஆம் தேதி முதல் மே மாதம் 03ஆம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதேசமயத்தில், 29ஆம் தேதி முதல் மே மாதம் 01ஆம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதே போல, மே மாதம் 02 மற்றும் 03 ஆகிய 2 தினங்களுக்கு ஏனைய தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: வரும் 29ஆம் தேதி முதல் மே மாதம் 03ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50 முதல் 80 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: மே மாதம் 02 மற்றும் 03 ஆகிய 2 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊட்டிக்கே இந்த நிலைமையா..? 73 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவு!

Last Updated : Apr 29, 2024, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details