தமிழ்நாடு

tamil nadu

மாசிமக தீர்த்தவாரி; புனித நீராட கும்பகோணத்தில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 3:19 PM IST

Updated : Feb 24, 2024, 3:37 PM IST

Masi Magam: மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் புனித நீராட ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்.

Masi Magam
மாசிமக தீர்த்தவாரி

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் புனித நீராட ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவிந்தனர்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அடுத்த மகாமகம் 2028-இல் நடைபெறும். இதை தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மக பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல, இந்த ஆண்டும் மாசி மக விழா கடந்த 15ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளும் சாமி திருவீதியுலா நடைபெற்று வந்தது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாசி மகத்துடன் கூடிய பௌர்ணமி நன்னாளில், இன்று காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் கௌதமேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீவரர், ஏகாம்பரேஸ்வரர், பாணபுரீஸ்வரர், நாகேஸ்வரர், திருக்கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர் ஆகிய 10 சிவாலயங்களில் இருந்து மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும், தனித்தனி ரிஷப வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.

பின்னர் அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் அஸ்திர தேவருடன் மகாமக குளத்தில் சிவாச்சாரியார் இறங்கி, மும்முறை முங்கி எழ, மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணககான பக்தர்கள் கலந்து கொண்டு, மகாமக குளத்தில் புனித நீராடியும், கரைகளில் எழுந்தருளிய சாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். இந்நிகழ்வை முன்னிட்டு, கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குளத்திற்குள் இரு பைபர் படகுகளுடன், கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனத்துடன், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத் துறையினர் தொடர்ந்து முன்னச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

Last Updated :Feb 24, 2024, 3:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details