மதுரை:மதுரை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியின் 5ஆம் நாளான இன்று (மே 15), கில்லி விளையாட்டில் குடும்பத் தலைவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம், கடந்த மே 11ஆம் தேதி முதல் பாரம்பரிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், நொண்டி என பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 5ஆம் நாளான இன்று கில்லி என்று அழைக்கப்படும் கிட்டி புல் விளையாட்டில், வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை மாநகர் மட்டுமன்றி, மேலூர், அழகர் கோயில் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், குழந்தைகள், வயதானோர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
இது குறித்து போட்டியில் பங்கேற்ற மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த அழகு தெய்வானை என்பவர் கூறுகையில், “இன்று விளையாடிய கிட்டி புல் விளையாட்டின் மூலமாக 40 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை நமது வீட்டுக்குள்ளேயே விளையாடலாம். இவையெல்லாம் மிக அறிவுப்பூர்வமான விளையாட்டு. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மதுரை அரசு அருங்காட்சியகம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, மதுரை மாவட்டம் அழகர் கோயிலைச் சேர்ந்த ரோகினி பேசுகையில், “சிறுவயதில் கிராமத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டை இன்று காணும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் இந்த விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து, அவர்களும் விளையாட ஊக்குவிக்க வேண்டும். உடம்பிற்கும், மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கக் கூடிய விளையாட்டுகள் நமது பாரம்பரிய விளையாட்டுகள் தான்” என்றார்.