தமிழ்நாடு

tamil nadu

கைதி மருத்துவமனையில் உயிரிழந்த விவகாரம்; சிபிசிஐடி விசாரணை கோரிய மனு மீது உயர் நீதிமன்றக்கிளை முக்கிய உத்தரவு! - Madurai Bench

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 7:20 PM IST

Madurai Bench: போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில், சேரன்மகாதேவி நீதித்துறை நடுவரின் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பே, இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றுவதா வேண்டாமா என்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த பழனியாச்சி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல்துறையினர், எனது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்யும் நோக்கில் கடுமையாக தாக்கியதில், எனது மகனின் கை கால்களில் பலத்த காயமடைந்து உள்ளார். மேலும், அவனது காலில் போலீசார் கொலை செய்யும் நோக்கில் சுட்டு உள்ளனர்.

அவரை காவல்துறையினர் முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாக தகவல் கிடைத்தது. அவரைப் பார்க்க நானும், எனது உறவினர்களும் சென்றபோது காவல்துறையினர் பார்க்க விடாமல் தடுத்தனர். பிறகு 8ஆம் தேதி இரவு 11 மணி போல் காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து, எனது மகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்றுள்ளனர்.

மறுநாள் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கால் அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில், 11ஆம் தேதி எனது மகன் இறந்து விட்டதாக தகவல் கூறினர். மேலும் ந்ந்த பிரச்னையும் செய்யாமல், எனது மகனின் உடலை வாங்கிச் செல்லும்படி காவல்துறையினர் என்னை மிரட்டினர்.

எனது மகனை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்குதல் நடத்திய வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மகன் இறப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வீரவநல்லூர் காவல் நிலையம், முக்கூடல் அரசு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்கவும், மேலும் துப்பாக்கி மற்றும் அவனைத் தாக்கிய ஆயுதங்கள் மற்றும் ரத்தக்கரை படிந்த காவல்துறையின் ஆடைகளை பாதுகாத்து வைக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்தி சுகுமார குருப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் சேரன்மகாதேவி நடுவன் நீதிமன்ற நீதிபதி விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விசாரணை துவக்க நிலையில் உள்ளது. எனவே, இந்த வழக்கில் பதில் பதிலளிக்க உரிய கால அவகாசம் வேண்டும்” என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, “இறந்து போன நபரின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை துவக்க நிலையில் உள்ளதால், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, தற்போது நடைபெற்று வரும் சேரன்மகாதேவி நீதித்துறை நடுவரின் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு தான், இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும்” எனக்கூறி வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"தேர்தலில் வாக்கு கேட்க எங்கள் சின்னத்தை தான் அனைவரும் பயன்படுத்த வேண்டும்" - சீமான் பேச்சு - NTK Mic Symbol Intro

ABOUT THE AUTHOR

...view details