தமிழ்நாடு

tamil nadu

“குற்றவியல் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” - பொய் புகார் என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி! - Fake Ganja Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 4:16 PM IST

Fake Kanja case: தன் மீது பதியப்பட்ட பொய்யான கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் தொடர்ந்த வழக்கில், குற்றவியல் சட்டத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கஞ்சா கடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

case-seeking-to-quash-of-fake-trafficking-in-ganja-madurai-high-court-has-ordered-to-quash-fake-ganja-case
போலியாகக் கஞ்சா வழக்குப் பதியப்பட்டதை ரத்து செய்து மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..

மதுரை: மதுரை அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், தன் மீது பதியப்பட்ட கஞ்சா வழக்கில் கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "லாட்டரி விற்பனை குறித்து என் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 2023 மார்ச் 7ஆம் தேதி மதுரை எஸ்.எஸ் காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் எனது அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்திலிருந்த ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, என்னையும் அழைத்துச் சென்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நான் போலீசார் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென என்னை துன்புறுத்தினார்கள். நான் மறுத்ததால் என் மீது 21 கிலோ கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது முற்றிலும் பொய்யான வழக்கு. ஆகவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன், துணை ஆய்வாளர் பேரரசி உள்ளிட்ட காவலர்கள் மீது தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ராக்கா விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

விசாரணை நடத்திய தென் மண்டல காவல்துறைத் தலைவர், எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன், துணை ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் இந்த வழக்கில் தவறாக நடந்து கொண்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி இளங்கோவன் விசாரணை செய்து வழங்கி உள்ள தீர்ப்பில், “இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி மனுதாரர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணை முடியும் வரை விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டாம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல், வழக்கு மதுரைக் கிளையில் நிலுவையில் இருந்தபோதே, அவசர அவசரமாக வழக்கு விசாரணை செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

மேலும், மனுதாரர் காவலர் மீது கொடுத்த தனிப் புகாரின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து காவலர்கள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் புகார் திரும்பப் பெற வலியுறுத்தி தான் மனுதாரர் மீது கஞ்சா வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, விசாரணை அலுவலர் நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை. அவரது அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது. பொதுமக்களுக்கு சேவை புரியும் அரசுத் துறையில் இருக்கும் விசாரணை அலுவலர் கீழ்ப்படியாமல் இருந்ததோடு, மரியாதைக் குறைவாகவும் நடந்துள்ளார்.

காவல் ஆய்வாளர் இந்த வழக்கைப் பொறுத்தவரை முற்றிலும் சட்டவிரோதமாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல், தனது மனசாட்சிக்கு விரோதமாகவே செயல்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவியல் சட்டம் முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனுதாரர் மீது முன் விரோதம் காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது உறுதியாகிறது. ஆகவே, வழக்கு தொடர்பாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:கருணை அடிப்படையில் வேலை வழங்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; திருவண்ணாமலை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - REFUSE COMPASSIONATE JOB

ABOUT THE AUTHOR

...view details