தமிழ்நாடு

tamil nadu

பாத்திமா சபரிமாலாக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - Fatima Sabarimala passport case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 4:06 PM IST

Madurai Bench: நீட் தேர்வு மற்றும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கை காரணம் காட்டி, பாஸ்போர்ட் வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி, பாத்திமா சபரிமாலாக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court madurai bench
உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: நீட் தேர்வு மற்றும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கை காரணம் காட்டி, புதிய பாஸ்போர்ட் வழங்க மதுரை பாஸ்போர்ட் அலுவலர் மறுப்பதாக பாத்திமா சபரிமாலா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த பாத்திமா சபரிமாலா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது இயற்பெயர் சபரிமாலா அழகர்சாமி. இஸ்லாமிய மார்க்கத்தின் மீது கொண்ட பற்றால், இஸ்லாம் மதத்திற்கு மாறி, பாத்திமா சபரிமாலா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். இந்நிலையில், நான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் ஆயுள் காலாவதியானதால், பாஸ்போர்ட்டை மீண்டும் புதுப்பிப்பதற்காக மதுரை பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன்.

ஆனால், பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் மண்டல அதிகாரிகள், கள்ளக்குறிச்சி, அரவக்குறிச்சி, காரைக்குடி, கீழக்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் என் மீது வழக்கு உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர முடியாது என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

ஆனால், இந்த வழக்குகள் அனைத்தும் நீட் தேர்வு, CAA குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மற்றும் ஹிஜாப் அணியக்கூடாது என்பதை எதிர்த்து போராடியதற்காக போடப்பட்டது. இதை தவிர்த்து, என் மீது எந்த குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் கிடையாது. இதை காரணம் காட்டி எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பது ஏற்கதக்கதல்ல.

நான் வாழ்வாதாரத்திற்காக அரபு நாடு சென்று வேலை செய்ய உள்ளேன். எனவே, என் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக, எனது பழைய பாஸ்போர்ட்டை புதுப்பித்து, எனது பெயரையும் மாற்றி பாஸ்போர்ட் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரையும் பாத்திமா சபரிமாலா என மாற்றிக் கொண்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அரசின் அறிவிப்பாணையிலும் தனது பெயரை மாற்றி புதுப்பித்துள்ளார்.

அவர் மீது வழக்குகள் உள்ளதை காரணம் காட்டி பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்குகள் அனைத்தும் பொது பிரச்னைகள் சார்ந்த போராட்டங்களாக பார்க்கப்படுகிறது. அவர் மீது எந்த குற்றபத்திரிகையும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், பாஸ்போர்ட் வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், மனுதாரருக்கு உரிய பெயர் மாற்றம் செய்து, புதிய பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்.. இறந்த பிறகும் தொடரும் சேவை.. கண்ணீர் மல்க திரைப்பிரபலங்கள் அஞ்சலி! - Tribute To Daniel Balaji

ABOUT THE AUTHOR

...view details