தமிழ்நாடு

tamil nadu

சங்கரன்கோவில் வேன் ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்; சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு! - Sankarankovil Van driver death

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 1:22 PM IST

Sankarankovil Van Driver Death Issue: சங்கரன்கோவில் வேன் ஓட்டுநர் முருகன், காவலர்கள் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

sankarankovil van driver death issue
சங்கரன்கோவில் வேன் ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்

மதுரை:தென்காசியைச் சேர்ந்த மீனா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூரைச் சேர்ந்தவர், வேன் ஓட்டுநர் முருகன். கடந்த 8ஆம் தேதி இவர், அச்சம்பட்டியில் உள்ள மக்களை தனது வேனில் ஏற்றிக்கொண்டு, சங்கரன்கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அச்சமயம், முப்பிடாதியம்மன் கோயில் அருகே வந்தபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ மீது முருகன் ஓட்டி வந்த வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர்கள், முருகனை தாக்கியுள்ளனர். அதில் அவர் மயக்கமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். காவல்துறையினர் அடித்ததால்தான் முருகன் இறந்ததாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, தொடர்ந்து வடக்குப்புதூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் கடந்த மார்ச் 9ம் தேதி உடற்கூராய்வு நடைபெற்றது. ஆனால், இதுவரை உடற்கூராய்வு அறிக்கையினை குடும்பத்தினருக்கு கொடுக்கவில்லை. அதனை கொடுக்க மறுப்பதால், பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது. ஆகவே, எங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் மறு உடற்கூராய்வு நடைபெற வேண்டும்.

மேலும், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த ஓட்டுநர் முருகனின் குடும்பத்திற்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான அனைத்து ஆணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும், சிபிசிஐடி விசாரணை நடைபெறும் நிலையில், சிபிசிஐடி அறிக்கையின் அடிப்படையில் காவலர்கள் மீது தேவையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும், தற்போது உடலை வைத்து அரசியல் செய்வதாகவும், உடலை பெற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவலர்கள் கடுமையாக தாக்கியது தான் முருகன் உயிரிழந்ததற்கு காரணம் என்றும், காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் எனவும் வாதிட்டார்.

இதனையடுத்து, காவல்துறை தரப்பில் காட்டப்பட்ட சில வீடியோ காட்சிகளை பார்த்த நீதிபதி, "முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சிபிசிஐடி விசாரணை அறிக்கையை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:மாஸ்கோவில் இசை விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல்..! 40 பேர் பலி..145 பேர் வரை படுகாயம் - ரஷ்யாவில் என்ன நடந்தது? - MOSCOW CONCERT HALL ATTACK

ABOUT THE AUTHOR

...view details