தமிழ்நாடு

tamil nadu

மருத்துவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒத்தக்கடை காவல்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு! - Madurai Bench Of Madras High Court

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 6:13 PM IST

Madurai Bench Of Madras High Court: மதுரையில் மகப்பேறு மருத்துவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து, ஒத்தக்கடை காவல்துறை பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai Bench Of Madras High Court
Madurai Bench Of Madras High Court

மதுரை: மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த மருத்துவர் சுஜாதா. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், நான் மதுரை ஒத்தக்கடையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வருகின்றேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரிடம் இடம் வாங்கியது சம்பந்தமாகப் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது.

இந்நிலையில் எனது மருத்துவமனைக்கு கவிதா மற்றும் அவரது மகன் ஆகியோர் வந்து பணம் கேட்டு மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கியும், அவதூறாகப் பேசி தகராற்றில் ஈடுபட்டார். மேலும் அவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டு ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நானும், எனது மருத்துவ ஊழியர்களும் தாக்கியதாகப் பொய்யான புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் எனது மருத்துவமனையில் நடைபெற்ற அனைத்து சம்பவமும் மருத்துவமனையின் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதில் அவர் அராஜகமாக நடந்து கொண்டதும் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதும் பதிவாகியுள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் ஒத்தக்கடை போலீசார் முறையான விசாரணை செய்யாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் இன்று(ஏப்.6) விசாரணைக்கு வந்தது. மருத்துவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர் மனுதாரர் மருத்துவமனைக்குள் வந்து தகராறு செய்த சிசிடிவி காட்சிகளையும், தன்னைத் தானே தாக்கி கொண்ட காட்சிகளையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

இதனைப் பார்த்த நீதிபதி, மருத்துவர் மீதான வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடைவிதித்தும், ஒத்தக்கடை காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:ரூ.3.54 கோடி மதிப்புடைய வைரம், தங்க நகைகள் பறிமுதல்.. கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.. - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details