சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த இளலூர் அருகில், திருப்போரூர் போலீசார், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று பேசிக் கொண்டிருந்த பிரிதிவிராஜ், கார்த்திகன், வசந்த் ஆகிய மூவரை விசாரித்துள்ளனர்.
அவர்கள் வந்த இரு கார்களை சோதித்த போது, அதில் மூன்று துப்பாக்கிகள் மற்றும் 163 தோட்டாக்கள், 57 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிரிதிவிராஜ் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், உரிமம் இல்லாத ஆயுதங்கள் வைத்திருந்த இந்த வழக்கின் முக்கிய நபரான ராடியன்ஸ் குரூப் நிறுவன நிர்வாக இயக்குநரை வழக்கில் சேர்க்காமல் காவல் துறையினர் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.