தமிழ்நாடு

tamil nadu

“ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இன்னும் பணிகள் முடிக்கப்படவில்லை?” - நெடுஞ்சாலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிருப்தி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 7:33 PM IST

Chennai to Thanjavur Highway project: சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி மற்றும் கும்பகோணம் வழியாக செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து பணிகள் முடிவடையவில்லை.

சுமார் 160 கிலோ மீட்டர் சாலை மிக மோசமாக உள்ளதால், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆண்டி மடம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் அதிகம் ஏற்படுகிறது. நான்கு வழிச் சாலை இல்லாத விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையில் சுங்க கட்டணம் நூறு ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

எனவே, பணி முடியும் வரை நுழைவுக் கட்டணம் வசூலுக்கு தடை விதிக்க வேண்டும். சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்த பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த 2020இல் முடிக்க திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் கஜா புயலின் காரணமாக பணிகள் தாமதமானதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.

வீராணம் நீர் பைப் லைனை மாற்றுவதற்கு மாற்று இடம் கையகப்படுத்த தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வு முன்பு இன்று (மார்ச் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இன்னும் பணிகள் முடிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போதைய பணிகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:மதுராந்தகம் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: பொதுநல வழக்ககாக எடுக்க நீதிமன்றம் பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details