தமிழ்நாடு

tamil nadu

2019-ல் நடந்த கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை - கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 8:16 AM IST

kumbakonam Crime News: 2019-ல் கும்பகோணம் அருகே இடையாநல்லூரில் கார்த்திக் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராஜசேகருக்கு(29) ஆயுள் தண்டனையுடன் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

kumbakonam additional district sessions court
கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் முட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் மகன் கார்த்திகேயன் (30), இவரது பெரியம்மா மகனான மணிகண்டனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு இடையாநல்லூரை சேர்ந்த ராஜா (எ) ராஜசேகரின் தங்கை பிரியதர்ஷினியுடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், திருமணம் நடந்த இரு ஆண்டுகளுக்குள் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 2018ஆம் ஆண்டு, மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து பிரியதர்ஷினி தனது அண்ணன் ராஜசேகர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் உறவினரான, கார்த்திகேயன் தந்தை கண்ணையனிடம், தனது தங்கை பிரிதர்ஷினியை, கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், இரண்டு குடும்பத்தினரிடையே முன்பகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி மாலை, கார்த்திகேயன், தனது நண்பர்களான ஆகாஷ், ஹரிஹரன், சரவணன், மற்றொரு கார்த்தி ஆகியோருடன் அங்குள்ள வயல் பகுதியில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த ராஜசேகர், தனது தங்கையை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆத்திரமடைந்து முதலில் கார்த்திகேயனின் இருசக்கர வாகனத்தை கையில் வைத்திருந்த அரிவாளாலால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.

இதனை கார்த்திகேயன் தடுத்து இதுகுறித்து கேள்வி கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் கூறி திட்டியதுடன், அவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கார்த்திகேயனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அவரது நண்பர்களான ஆகாஷ், ஹரிஹரன், மற்றொரு கார்த்தி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்திருந்தனர்.

இந்த படுகொலை வழக்கு, கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயகுமார் நேற்று (ஜன.20) ஆஜராகி வாதாடினார். இருதரப்பிலும் விசாரணை முழுமை பெற்றதைத் தொடர்ந்து, இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜசேகருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ விவகாரம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் கைது..

ABOUT THE AUTHOR

...view details