தமிழ்நாடு

tamil nadu

"சிக்னலில் நின்று பிச்சை தான் எடுப்பாய்" - நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு பளிச்சென பதிலளித்த கேபிஒய் பாலா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 12:30 PM IST

KPY Bala Ambulance donate: தொடர்ச்சியாக ஏழைகளுக்கும், மலைக்கிராம மக்களுக்கும் பல நலத்திட்ட உதவிகளை செய்துவரும் நடிகர் கேபிஒய் பாலா, 'நான் எந்த சிக்னலில் பிச்சை எடுப்பனோ? அந்த சிக்னலில் நான் தானமாக அளித்த ஆம்புலன்ஸ் வந்து நிற்குமாயில் அதுவே எனக்கு பெருமை' என நெட்டிசன்களுக்கு பதிலளித்துள்ளார்.

KPY Bala Ambulance donate
கேபிஒய் பாலா

நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு கேபிஒய் பாலா நச் பதில்!

திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்டது நெக்னாமலை மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் அப்பகுதி மக்கள் சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், கிராம மக்கள் சாலை இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகள் என 7 கிலோ மீட்டர் வரை மலைப்பாதையில் டோலி கட்டி தூக்கி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து நெக்னாமலை கிராம மக்களுக்கு அவசர ஊர்தி ஒன்றை நடிகர் KPY பாலா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய KPY பாலா, "கடந்த வருடம் அக்டோபர் மாதம் செய்தி ஒன்று பார்த்தேன், வாணியம்பாடி நெக்னாமலை பகுதியிலிருந்து கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி தீப்பந்தத்தோடு, மிகவும் கஷ்டமான சூழலில் மருத்துவமனைக்கு, எந்த வித வசதியும் இல்லாமல் கொண்டு வந்தார்கள். இந்த செய்தியை நிறை பேர் எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் இதுகுறித்து இப்பகுதியில் விசாரணை செய்ய வந்த போது, இந்த மலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலேயே குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆகவே, நண்பர்கள் மூலம் இந்த மலைக்கு எவ்வித ஆம்புலன்ஸ் சரியாக இருக்கும் என ஆய்வு செய்து, இந்த 5ஆவது ஆம்புலன்ஸை நெக்னாமலை பகுதி மக்களுக்கு கொடுத்துள்ளேன்.

இதற்கு நிறைய பேர் ஆதரவு அளித்து வருகின்றார்கள், அவர்களுக்கு நன்றி. என்னதான் நல்லது செய்தாலும், சமூக வலைத்தளம் மூலம் உனக்கு பின்னாடி யார் செயல்படுகிறார்கள்? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். ஆமாம். எனக்கு பின் நிறைய பேர் இருக்கின்றார்கள், அவமானமும், கஷ்டமும் தான் எனக்கு பின் இருக்கின்றார்கள். அவர்களால் தான் நான் இங்கே இருக்கின்றேன்.

மேலும் சிலர் இப்படி செய்துகொண்டு இருக்கிறீர்கள், எதிர்காலத்திற்கு சேர்த்து வையுங்கள் என்று கூறுகிறார்கள். நான் கண்டிப்பாக சேர்த்து வைப்பேன், மேலும் சிலர் சமூக வலைதள கமெண்டில் இப்படியே செய்து கொண்டிருந்தால், நீ சிக்னலில் பிச்சை தான் எடுப்ப, அப்போ கூட நான் பிச்ச போடம தான் போவன் என பதிவிடுகின்றனர். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறோனோ? அந்த சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் வரும் அது எனக்கு சந்தோஷம், என்னால் முடிந்த வரை கொடுப்பேன்.

எதிர்காலம் என்னை காப்பாற்றும். மேலும் சிலர் இவனுடைய பிணத்தை கூடிய சீக்கிரம் மிருகங்களால் கொத்தி சாப்பிடப்படும் என கூறுகிறார்கள். அவர்கள் காசு கொடுத்தால் பிறரைப் பற்றி தப்பாக கமெண்ட் போடுபவர்கள், அவர்கள் காசு வாங்கி கொண்டு என்னைப் பற்றி தவறாக போடுவதற்கு என்னிடம் காசு கொடுங்கள். நானே என்னை பற்றி தவறாக போட்டுக்கொண்டு அந்த காசில் செமஸ்டர் பணம் கட்ட கஷ்டப்படும் மாணவர்களுக்கு கொடுப்பேன்.

நான் இப்படி கமெண்ட் போடுபவர்களுக்கு பதில் அளிப்பதற்கு முன்பே, மக்கள் அவர்களுக்கு பதில் அளித்து விடுகிறார்கள். இதை எவ்வித நோக்கத்துடன் செய்யவில்லை, யாரிடம் காசு வாங்கி செய்யவில்லை. பத்து ஆம்புலன்ஸ் கொடுப்பேன் எனக் கூறினேன். அதில், 5 ஆம்புலன்ஸ் கொடுத்துவிட்டேன். இன்னும் 5-ஐ மக்கள் ஆதரவுடன் கொடுத்துவிடுவேன். எனக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காந்திஜியா? நேதாஜியா? தமிழக அரசியலில் மையம் கொள்ளும் புதிய விவாதம்..!

ABOUT THE AUTHOR

...view details