தமிழ்நாடு

tamil nadu

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்; அதிகாரிகள் ஒட்டிய நோட்டீஸை கிழித்தெறிந்த ஜாபர் சாதிக்கின் தாய்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 8:52 AM IST

Jaffer Sadiq: மத்திய போதைப் பொருள் பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சில் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஜாபர் சாதிக்கின் தாய் நோட்டீஸை கிழித்து வீட்டிற்கு புதிய பூட்டு ஒன்றை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

NCB inquiry about Jaffer Sadiq drug smuggling case
டெல்லி போதைப்பொருள் கடத்தல் விவகாரம்

சென்னை: கடந்த 15ஆம் தேதி டெல்லியில் விலை உயர்ந்த 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணை விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுகவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பதும் அவரின் சகோதரர்களான மொய்தீன், சலீம் ஆகியோருடன் இணைந்து போதைப்பொருட்களை தொடர்ந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை மண்டல போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் தலைமறைவாகியுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் மொய்தீன், சலீம் ஆகியோரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வலைவீசித் தேடிவருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர்கள் வீட்டிற்கு சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து நோட்டீஸ் ஒன்று ஒட்டி, சீல் வைத்து விட்டு சென்றனர். மேலும் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில், இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் (மார்ச் 3) ஜாபர் சாதிக்கின் தாய் அவர்களின் வீட்டிற்கு சீல் வைத்ததையும், அங்கு ஒட்டியுள்ள நோட்டீஸையும் செல்போனில் புகைப்படம் எடுத்து விட்டு அங்கிருந்து ஆட்டோவில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அதில் வந்த ஆட்டோவின் பதிவு எண் மற்றும் உடன் வந்த நபர் பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அவர் எடுத்த புகைப்படம் ஜாபர் சாதிக்கிற்கு அனுப்புவதற்காக எடுத்தாரா? வேறு எதற்காக எடுத்துள்ளார்? என்பன உள்ளிட்ட கோணத்தில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு (மார்ச் 4) மீண்டும் ஜாபர் சாதிக்கின் தாய் ஆட்டோவில் அவரது வீட்டிற்கு சென்று வீட்டின் கதவில் ஒட்டப்பட்டு இருந்த சம்மன் நோட்டீஸை கிழித்து விட்டு, வீட்டின் கதவிற்கு புதிய பூட்டு ஒன்றை பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அவர்கள் எங்கே சென்றார்கள்? அவரது உறவினர் வீடு எங்கே உள்ளது? என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சீமான் தாக்கல் செய்த வழக்கு; நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details