தமிழ்நாடு

tamil nadu

“எனது உரிமைதான் மேலானது.. மற்றபடி அமைதியானவர்”.. காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா தரப்பு வாதம்! - Ilayaraja songs copyright issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 7:36 PM IST

Ilayaraja explained MHC: “காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தாகவும், மற்றபடி அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்க கூடியவர் நான்” என்றும் இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை மதித்து நடப்பதாக இளையராஜா தரப்பில் விளக்கம்
இளையராஜா காப்புரிமை விவகாரம்

சென்னை: காப்புரிமை விவகாரத்தில், கடந்த முறை வாதத்தின் போது, இளையராஜா தாரப்பில் ‘ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான்” என கூறியிருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தாகவும், மற்றபடி அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்கக்கூடியவர் நான், என்று இளையராஜா தரப்பில் இன்று (ஏப்.17) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும், இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும், எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அமர்வில் நிலுவையில் உள்ளது. கடந்த விசாரணையின் போது இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ‘ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான்’ எனவும், வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மூத்த நீதிபதி மகாதேவன், “இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது” என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமை தான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தாகவும், மற்றபடி அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு அரிய வகை ஆமைகள் கடத்தல்.. தலைமைக் காவலர் கைது! - Turtles Smuggling Case

ABOUT THE AUTHOR

...view details