தமிழ்நாடு

tamil nadu

பவானிசாகர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தம்பதி பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 6:43 AM IST

Wild Elephant Attack: பவானிசாகர் அருகே வனப்பகுதிக்குள் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற கணவன், மனைவி இருவரும் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

husband and wife killed by wild elephant in Bhavanisagar forest area
பவானிசாகர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழப்பு

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பூதிகுப்பம் என்ற வன கிராமம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பூதிகுப்பம் கிராமத்தில் நஞ்சன் (75), துளசியம்மாள் (70) ஆகிய தம்பதி வசித்து வந்துள்ளனர். தினமும் இருவரும் சேர்ந்து வனப்பகுதிக்குள் சென்று சுண்டைக்காய் சேகரிப்பது வழக்கம்.

இத்தம்பதி நேற்று (ஜன.௨௪) விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள வால் மொக்கை என்ற இடத்தில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென இருவரையும் தும்பிக்கையால் தாக்கி மிதித்துள்ளது.

காட்டு யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது, நஞ்சன் மற்றும் துளசியம்மாள் இருவரையும் தாக்கிய காட்டு யானை அதே பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்டு அச்சமடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக விளாமுண்டி வனத்துறையினருக்கும், பவானிசாகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார் காட்டு யானையை விரட்டி அடித்து விட்டு உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதிக்குள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற மூன்று பேரை காட்டு யானை இதே இடத்தில் தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பகுதியில் கணவன், மனைவி இருவரும் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"அயோத்தி ராமர் கோயிலால் இந்தியாவின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது" - மத்திய அமைச்சர் எல்.முருகன் !

ABOUT THE AUTHOR

...view details