ஐதராபாத் :கூகுளின் மிக சிறந்த மென்பொருள் கூகுள் மேப் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுள் மேப்பின் வருகையால், புதிய இடங்களுக்கு இடையிடையே வழிக்கேட்டு செல்வது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. மேலும், கூகுள் மேப்பினால் தொலைதூர பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அத்துடன், நிறைய பேர் தைரியமாக தனியாகவே பயணங்களை மேற்கொள்ளவும் உதவியாக உள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் ரயிலில் இருந்து திருடப்பட்ட தனது தந்தையின் பை மற்றும் தொலைபேசியை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், "எனது தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நாகர்கோவில் - கச்சிகுடா விரைவு ரயிலில் (Nagercoil - Kacheguda express) ஸ்லீப்பர் வகுப்பில் சென்று கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 1:43 மணிக்கு ரயில் ஏறினார். ரயில் காலியாக இருந்துள்ளது. அப்போது என் அப்பாவுடன் ஏறிய மற்றொரு நபர் எனது அப்பாவின் பை மற்றும் மொபைல் போனை திருடி, திருநெல்வேலி சந்திப்பில் ரயிலில் இறங்கி உள்ளார்.
அதை உணர்ந்த என் அப்பா, ரயிலில் தேடிப் பார்த்துவிட்டு, தனது நண்பரின் தொலைபேசியில் இருந்து அதிகாலை 3:51 மணிக்கு அவரது போன் திருடப்பட்டதைத் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, அவரின் மொபைலில் இருப்பிடப் பகிர்வு (Location sharing) ஆன் ஆக இருந்தது. அது எனக்கு பகிர்வும் செய்யப்பட்டு இருந்தது. அதன் படி, அதாவது மொபைலின் இருப்பிடத்தை என்னால் கண்காணிக்க முடியும். அதைச் சோதித்தபோது, திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே தண்டவாளத்தில் மொபைல் இருந்தது.
அதன் மூலம் திருடன் வேறு ரயிலில் நாகர்கோவிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டறிந்தேன். இதை மீட்டெடுக்க உதவுவதற்காக எனது நெருங்கிய நண்பரான உள்ளூர் திமுக பிரமுகர் பாபினை அழைத்தேன். மேலும் திருடனை பிடிக்க இருவரும் நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றோம். ரயில்வே காவல் துறையினர் ஒருவர் எங்களுடன் வந்தார்.