தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 7:27 PM IST

Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (பிப்.21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாகக் கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாகத் தெரிவிக்கின்றனர் என வாதிட்டார்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், போராட்டங்கள் நடத்தியதற்காக, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராகக் கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியதாக அரசியல் காரணமாகத் தொடரப்பட்ட வழக்குகள் அவை என்றார்.

மேலும் இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான் என்பதால், 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை முன் வைத்த வாதம் தவறு எனத் தெரிவித்தார்.

மேலும், கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத் துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை, புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத்துறையினரே கூறுகின்றனர் என்றும் வாதிட்டார்.

அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை என்றும் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை, நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,"2,900 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள்" என விளக்கினார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் எதிரொலி.. இந்தியர்களின் கச்சத்தீவு திருவிழா பயணம் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details