தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் நா.த.க-வுக்கு கிடைக்காத விவசாயி சின்னம் சுயேச்சைகளுக்கு கிடைத்தது எப்படி? - தேர்தல் ஆணையம் விளக்கம்! - FARMER SYMBOL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 12:28 PM IST

Sugarcane Farmer Symbol: நாம் தமிழர் கட்சிக்கு மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது எப்படி என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னம் கோரியிருந்தனர். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்திற்காக நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு குறிப்பிட்ட சின்னத்தை எப்படி கோர முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம், வடசென்னை உள்ளிட்ட தொகுதியில் ஒரு சில சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கீடு செய்யும். இதன்படி, சம்பந்தப்பட்ட அந்த கட்சியின் வேட்பாளர் அந்த தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடாத தொகுதிகளில், அந்தச் சின்னம் சுயேச்சை சின்னம்(free symbol) ஆக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு சின்னம் free symbol பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டால் எந்த சுயேச்சை வேட்பாளரும் அந்த சின்னத்தை கேட்கலாம். இதன்படி, ஒரு சின்னத்தை பொது சின்னமாக பெற்ற கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடாவிட்டால், அந்த தொகுதியில் அந்த குறிப்பிட்ட சின்னம் free symbol பட்டியலுக்கு சென்று விடும். இந்த விதிகளின் படி தான் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"ஏப்.19 அன்று வீட்டில் சீரியல் பார்க்காமல் விரைவாக சென்று வாக்கு செலுத்துங்கள்" - பரப்புரையின் போது அமைச்சர் அட்வைஸ்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details