தமிழ்நாடு

tamil nadu

ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்னதாக மசூதி இல்லை - மத்திய இணை அமைச்சர் முரளிதரன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:19 PM IST

Minister V Muraleedharan: ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்னதாக மசூதி இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்தது, அது இடிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது, எந்த மதத்தினராலும் வழிபாட்டிற்காக அந்த கட்டிடம் பயன்படுத்தப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.

ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்னதாக மசூதி இல்லை
ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்னதாக மசூதி இல்லை

கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக கிளை அலுவலகத்தில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டு, பாஜக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், "கோயம்புத்தூர் குறித்து பிரதமர் பழமையோடு நவீனத்துவமும் சேர்ந்த பகுதி என குறிப்பிடுகிறார். இந்திய கலாச்சாரத்திலும், இந்துக்கள் கலாச்சாரத்திலும் சனாதன தர்மத்திலும் தமிழ்நாட்டிற்கு பழம்பெருமைமிக்க பாரம்பரியம் உள்ளது.

இங்குள்ள மருதமலை கோயில் 1,200 ஆண்டுகால பழமை வாய்ந்ததாகும். அந்த வகையில், தமிழ்நாடு கலாச்சாரமும், பாரம்பரியமும் சனாதன தர்மத்தோடு இணைந்ததாகும். இதை அறியாமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்கள் சனாதன தர்மத்தை கொடூர நோய்களோடு ஒப்பிட்டு அழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களின் கருத்தை நிராகரித்து விட்டனர்.

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் இதில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் கோயில் உருவாக வேண்டும் என 500 ஆண்டுகளாக மக்கள் காத்திருக்கின்றனர். பெத்லகேம் கிறித்தவர்களுக்கு புனித நகரம் என்பது போல, மெக்கா இஸ்லாமியர்களுக்கு புனித நகரம் என்பது போல, இந்துக்களுக்கு அயோத்தி புனித நகரமாக விளங்குகிறது.

நமது அரசியலமைப்புச் சட்டம் விரும்பும் மதத்தினை கடைபிடிக்க அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில், இந்து மதத்தை பின்பற்றுபவர்களும், ராமரை வழிபடுபவர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடலாம். தமிழ்நாடு அரசு இந்தியாவில் இல்லாததாக நினைத்து, அரசியலமைப்பில் இல்லாத அவர்களது கருத்துக்களையும், விதிமுறைகளையும் வலியுறுத்துகின்றனர்.

ராமர் பிரதிஷ்டை நிகழ்வைக் காண மொரிசியஸ் நாடு அவர்களது மக்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளது. ராமர் பிரதிஷ்டை அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. வரும் நாட்களில் மாநில அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளிவரலாம். தமிழ்நாடு அரசும், தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு பாதிப்பு இல்லை என்றால், முன்பே ராமர் கோயில் திறக்கப்பட்டிருக்கும்.

பாஜகவால் ராமர் கோயில் கட்டப்படவில்லை. அதற்கான அறக்கட்டளைதான் முடிவுகளை எடுக்கிறது. அதற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில மதத்தை மட்டுமே ஆதரிக்கின்றனர்.

இந்துக்களின் கருத்துக்களைக் கண்டு கொள்வதில்லை. அதனால்தான் ராமர் கோயிலுக்குச் செல்வதை அரசியலாகப் பார்க்கின்றனர். அப்படி என்றால் கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழ்நாடு அரசு, ஏன் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் இந்து கோயில்களை நிர்வகிக்க வேண்டும்? பக்தர்களிடம் அதை கொடுத்து விடலாமே' என கேள்வி எழுப்பினார்.

உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் முன்னதாக மசூதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்தது. அது இடிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. எந்த மதத்தினராலும் வழிபாட்டிற்காக அந்த கட்டிடம் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவரது கருத்து பொய்யானது. அயோத்தி, ராமர் பிறந்த நிலம். அங்கு ராமர் கோயில் இருந்துள்ளது என்பதை வரலாற்றுப் பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்து, தற்போது அங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், 'ராகுல் காந்தியின் முந்தைய நடைபயணத்தைப் போலவே தற்போது துவங்கியுள்ள நடைபயணமும் தோல்வியில்தான் முடியும். ராமர் பிரதிஷ்டை என்பது அனைவருக்குமான விழா என்பதால், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பிரதமர் சென்று வழிபட்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு அவர் சென்று வழிபட உள்ளார்.

மத்திய அரசின் 'விக்சித் பாரத்' யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்திலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பிரதமர் மோடியின் மக்கள் வளர்ச்சி திட்டங்களை பொதுமக்கள் சிறப்பாக வரவேற்கின்றனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பணிப்பெண் கொடுமை; தம்பதி மீது வழக்குப் பதிவு.. திருமாவளவன் கடும் கண்டனம் - பல்லாவரம் எம்எல்ஏ ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details