தமிழ்நாடு

tamil nadu

ஜனநாயகத்தைக் காக்க பழைய வாக்குச்சீட்டு முறையே சரியானது: துரை வைகோ கருத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 12:35 PM IST

Durai Vaiko: ஜனநாயகத்தைக் காக்க தேர்தலில் பழையபடி வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Durai Vaiko said that old ballot system should be brought to protect democracy
ஜனநாயகத்தைக் காக்க பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என துரை வைகோ கூறியுள்ளார்

ஜனநாயகத்தைக் காக்க பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என துரை வைகோ கூறியுள்ளார்

மதுரை: மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம், மதுரையில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நேற்று (பிப்.20) நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதிகளை வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "தமிழக பட்ஜெட் ஒரு சிறந்த பட்ஜெட்டாக விளங்குகிறது. ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதிகளை அளிக்கவில்லை. சமூக நீதி, சமத்துவத்தை மையப்படுத்தி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை இருந்தாலும் கூட, சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக-வுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக தரும் என எதிர்பார்க்கிறோம். 2 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை சீட்டுகள் கேட்டு இருக்கிறோம். திமுக அளிக்கும் தொகுதிகளின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்ட அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. மோடி பிரதமர் ஆனால், விலைவாசி குறைக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் அதன்படி விலைவாசியைக் குறைக்கவில்லை.

ராமர் கோவில் திறப்பை மையப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற நினைக்கிறார். அவர் மக்களை ஏமாற்றித் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். மோடியின் எண்ணத்தை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற நினைக்கிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எதை வைத்து பாஜக சொல்கிறது எனத் தெரியவில்லை.

தனிப்பட்ட முறையில் தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பமில்லை. மதிமுக-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இயக்கம் முடிவெடுக்கும் பட்சத்தில், நான் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு நேரடி அரசியல் புதியதாக உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை.

ஜனநாயகத்தைக் காக்க பழையபடி வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் நடத்தும் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட் 2024: 'ஒரு கிராமம் ஒரு பயிர்' புதிய திட்டம் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details