தமிழ்நாடு

tamil nadu

மீமிசலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 9:52 PM IST

Drugs were seized in Pudukottai shrimp farm: புதுக்கோட்டை மாவட்டத்தில், இறால் பண்ணையில் பறிமுதல் செய்த ரூ.110 கோடி மதிப்புடைய போதைப்பொருட்களை, இன்று (மார்ச் 13) போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Drugs were seized in Pudukottai shrimp farm
Drugs were seized in Pudukottai shrimp farm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மீமிசல் அடுத்த அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில், கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும், அதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த தயாராக உள்ளதாகவும் மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், அரசங்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளில், கடந்த மார்ச் 10ஆம் தேதி, மீமிசல் போலீசார் உதவியோடு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, அங்கே இருந்த இறால் பண்ணை ஒன்றில், படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த ரூ.110 கோடி மதிப்புடைய 100 கிலோ எடை கொண்ட ஹசீஸ் (hashish) மற்றும் ரூ.1.05 லட்சம் மதிப்புடைய 872 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் அமீர் சுல்தான் என்பவர் தலைமறைவாகியுள்ள நிலையில், மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை இன்று அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் முன்பு ஒப்படைத்தனர். அதில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்றம் சார்பாக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:’என்ஜாய் என்ஜாமி’ விவகாரம் - சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details