தமிழ்நாடு

tamil nadu

சொத்துக்காக பெற்றோரை கொலை செய்தால் வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா? சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன? - Parents Murder for property

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 6:19 PM IST

Updated : May 1, 2024, 8:07 PM IST

Parents Murder for property: சொத்துக்களுக்காக பெற்றோர் கொலை செய்யப்பட்டால் அவரது வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடையாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈடிவி பாரத் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

சொத்துக்காக பெற்றோரை கொலை செய்தால் வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா
சொத்துக்காக பெற்றோரை கொலை செய்தால் வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா

சென்னை:சமீப காலங்களாக சொத்துக்களுக்காக பெற்றோர்களை பிள்ளைகளே தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உயில்கள் ஏதும் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் தங்களுக்குக் கிடைக்குமா என்ற பயத்தில் பெற்றோர் தாக்கப்படுகின்றனர்.

தந்தை தனது சுய உழைப்பால் சம்பாதித்த சொத்தாக இருந்தால், அதை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க இந்து வாரிசு உரிமைச் சட்டம் அனுமதி வழங்குகிறது. அதனால், எங்கே சொத்துக்கள் மற்ற வாரிசுகளுக்குச் சென்று விடுமோ என்ற பயத்தில் பெற்றோரைத் தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்த பின்னர், முழு சொத்துக்களும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெற்றோரை ஆண் பிள்ளைகள் இவ்வாறு செய்கின்றனர் எனவும் கருத்து நிலவுகிறது. இவ்வாறு தாக்கப்படும் பெற்றோர் உயிரிழந்தால், அவர்களின் சொத்துக்கள் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் படி அவர்களின் வாரிசுகளுக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இந்து வாரிசு உரிமைச் சட்டம் சொல்வது என்ன? இந்த வாரிசு உரிமைச் சட்டம் (Hindu Succession Act) 1956, இந்துக்களின் வாரிசுகள் தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்க கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியர் அல்லாத அனைவருக்கும் பொருந்தும் வகையில் கொண்டு வரப்பட்டது.

கலப்புத் திருமணம் மற்றும் மதம் மாறிய அனைவருக்கும் பொருந்தும். பழங்குடியினர், இச்சட்டத்தின் படி சொத்தில் உரிமை கோர முடியாது. நேரடி வாரிசுகள் இல்லாத சொத்தின் இரண்டாம் வாரிசுதாரர்கள் சொத்தை அனுபவிக்க உரிமை உள்ளது. (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் இந்த சட்டத்தின் படி, அவரின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கிற்கு வழங்கப்பட்டது)

இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியவர் தந்தையின் சொத்தை பெற உரிமை உள்ளது. அந்த சொத்தை பெற அவரது மகனும் கட்டாயம் இந்து மதத்திற்கு மாறி இருக்க வேண்டும். பெண்களுக்கான சொத்துரிமை சட்டத் திருத்தம் 2005-இல் கொண்டு வரப்பட்டது. சட்டங்கள் சம உரிமை வழங்கினாலும், சொத்திற்காக தாய், தந்தை கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. சொத்திற்காக கொலை செய்தால் அந்த சொத்துக்கள் வாரிசுதாரருக்கு கிடையாது என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கே.எம் விஜயன், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்: தனது சுய உழைப்பால் தந்தை சம்பாதித்த சொத்துக்களை அவர் யாருக்கும் கொடுக்க உரிமை உள்ளது. அதனால் சொத்துக்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டால், அந்த கொலை செய்த வாரிசுக்கு மட்டும் சொத்தில் உரிமை கிடையாது. மற்றவர்களுக்கும் உரிமை உள்ளது.

கே.எம் விஜயன், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

ஏனெனில், சொத்துக்காக கொலை நடந்திருப்பதால், இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் படி அவருக்கும் பங்கு வழங்குவது, மறைமுகமாக அவர் செய்த கொலையை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதாக ஆகவிடும். அதனால், அவருக்கு உரிமை கிடையாது என சட்டம் இயற்றப்பட்டது சரியானது.

நடராஜன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன்:கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம், சொத்துக்கள் மற்ற வாரிசுதாரர்களுக்குச் சென்று விடும் என்பதால் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் நினைத்தால், கொலைச் சம்பவங்கள் எதற்காக நடைபெற்றது என விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட வாரிசுக்கு மட்டும் உரிமை கிடையாது என உத்தரவிட முடியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் இருக்கும் சவால்கள் என்னென்ன? - நேத்ரா குமணன் பிரத்யேக பேட்டி! - NETHRA KUMANAN Olympic Practice

Last Updated :May 1, 2024, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details