தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தல் என தாக்குதல்.. வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:49 PM IST

Child kidnap rumors: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை குழந்தைகள் கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் தாக்கிய நிலையில், குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றுவதாக தகவல் பரவியது. இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் கிராமத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் குழந்தையிடம், வட மாநிலத் தொழிலாளர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, குழந்தையின் தாய் வட மாநில இளைஞர்களிடம் யார் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண்ணை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஊர் மக்கள் திடீரென அங்கு திரண்டு, வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையிலான போலீசார், இளைஞர்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் மிக வேகமாக பரவியது.

அப்போது, கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் சென்றுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள், அவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் என பிடித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து அவர்களைத் தாக்கினர்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற போலீசார், அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது காவல் நிலையம் முன்பு திரண்ட ஏராளமான பொதுமக்கள், காவல் நிலையத்தில் பிடித்து வைத்துள்ள வட மாநிலத்தவர்களை வெளியே விட வேண்டும் என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, முற்றுகையில் ஈடுபட்ட கும்பலை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, "செம்படபுத்தூர் கிராமத்தில் குழந்தை கடத்தியதாக பொதுமக்கள் மூன்று வட மாநில இளைஞர்களை பிடித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தியதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை.

கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம், அப்படி யார் மீதாவது சந்தேகம் இருந்தால், காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நேரிடும். அதேபோல், தேவையின்றி வட மாநிலத் தொழிலாளர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களது பணியிடத்தை விட்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பிள்ளை கொத்தூர் எருது விடும் விழா!

ABOUT THE AUTHOR

...view details