தமிழ்நாடு

tamil nadu

வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், பந்தல் ஏற்பாடு: ராதாகிருஷ்ணன் தகவல் - Lok Sabha Election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 5:30 PM IST

Postal Vote Date Extended In Chennai: காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு பணியை நாளையும், தேவைப்பட்டால் 15ஆம் தேதியும், மாற்றாக 16ஆம் தேதி வரையிலும் நீடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையாளரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Postal Vote Date Extended In Chennai
Postal Vote Date Extended In Chennai

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளிடையே தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் குறித்த புதிர் போட்டி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.

அப்போது மாணவர்களிடையே பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் 10-ல் 4 பேர் வாக்களிப்பது இல்லை. இது பெருமைக்குரிய விஷயமா? வாக்களிப்பது குறித்துக் கடந்த முறை 18 வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இந்த முறை 21 வகையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

நாளை தமிழ்ப் புத்தாண்டு, இரண்டு நாட்களுக்கு முன் ரம்ஜான் விடுமுறை ஆனாலும் 40 ஆயிரம் பணியாளர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயமாக வாக்களிப்பதில் பங்களிக்க வேண்டும். உங்கள் பெற்றோரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

கடந்த முறை தேர்தலின்போது, சென்னையில் இரண்டு தொகுதிகளில் 58% மற்றும் 64% வாக்குப்பதிவாகி இருந்தது. அதனை இந்த முறை 100% வாக்குப்பதிவாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம். நாங்கள் 80'S எங்கள் காலத்தில் ஊரும், மாவட்டமும் மேடையாக இருந்தது. ஆனால் இன்று, உங்களுக்கு உலகமே மேடையாக இருக்கிறது" என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தேர்தலையொட்டி 24 மணி நேரமும் பணி நடந்து கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டும் பணி அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முடிக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் 5% இயந்திரங்களில் ஆயிரம் மாதிரி வாக்குப்பதிவுகள் செய்யப்பட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 30 லட்சத்து 47 ஆயிரம் பேருக்குக் கிட்டத்தட்ட 78% பேருக்கு பூத் சிலிப் வழங்கியுள்ளோம். வீடுகள் பூட்டி இருப்பது, பணிக்குச் சென்றவர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான மையங்களைத் தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தபால் வாக்குப்பதிவைப் பொருத்தவரை 4375 முதியோர்களில் 3570 பேரிடமும், 351 மாற்றுத்திறனாளிகளில் 312 பேரிடமும் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. மீதம் உள்ளோரிடம் இன்று (ஏப்.13) பெறப்படுகிறது. காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவில் அரக்கோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் இருந்து வர வேண்டிய தபால் வாக்குச் சீட்டுகள் நேற்று (ஏப்.12) மதியம் தான் வந்தது.

அதைப் பிரிக்கும் பணி தாமதமானதால் சில காவலர்கள் வாக்குச் செலுத்த முடியாமல் வந்து செல்லக்கூடிய சிரமம் ஏற்பட்டது. தபால் வாக்குப்பதிவு பணியை நாளையும், தேவைப்பட்டால் 15ஆம் தேதியும், மாற்றாக 16ஆம் தேதி வரையிலும் நீடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெறப்பட்ட தபால் வாக்குகள் 17ஆம் தேதி திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சென்னையின் வாக்குகள் சென்னையிலும், பிற பகுதி கட்டுப்பாட்டு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 17ஆம் தேதிக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2403 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்றும் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று. பணி நிமித்தத்தைக் கருத்தில் கொண்டு குறித்த நாளில் இல்லாவிட்டாலும் ஏதுவான நாளில் வாக்கு செலுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை களத்தில் கண்காணித்தல் மற்றும் வாகன சோதனைகள் மூலம் ரூ.9.96 கோடி பணமும், ரூ.6.57 கோடி மதிப்புள்ள பொருட்கள் என ரூ.15.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் ரூ.61.12 லட்சம் மதிப்பிலான மது மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமானவரித் துறை மூலமாக ரூ.23.83 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.16.98 கோடி நேரடியாக வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது. கழிவறை, பந்தல், குடிதண்ணீர், மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆரணி அரிசி ஆலைகளில் தேர்தலுக்காக பணப் பதுக்கலா? வருமான வரித்துறையினர் தீவிர சோதனை!

ABOUT THE AUTHOR

...view details