தருமபுரி:தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலத்தில் நேற்று (ஜன. 24) மாலை அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்த நிலையில் பாலத்திற்கு மேல் இருந்த லாரி மற்றும் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்துக்குள்ளான கார்கள் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். இந்நிலையில் காரில் குழந்தைகள் இருப்பதை அறிந்து வந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகளை மீட்டனர். இளைஞர்கள் குழந்தைகளை மீட்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதை தொடர்ந்து காரினுள் இருந்தவர்களை மீட்பதற்குள் லாரியில் இருந்த தீ காரை பற்றிக் கொண்டதால் அவர்களால் மீட்க முடியாமல் குழந்தைகளை மட்டும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வினோத் என்பவரின் 6 வயது குழந்தை ஜெஸ்வின், 2 வயது விஜயஷா என்ற குழந்தை மற்றும் விமல் என்பவரின் நான்கு மாத பெண் கைக்குழந்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது.