தமிழ்நாடு

tamil nadu

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு: ஒருநாள் வேலை நிறுத்தம் - அகில இந்திய கட்டுநர் சங்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 7:23 AM IST

Builders Association of India: கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து தமிழகம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய கட்டுநர் சங்கம் அறிவித்துள்ளது.

Builders Association of India announced a one-day strike the rise in price of construction materials
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்தம்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்தம்

திருச்சி:கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய கட்டுநர் சங்கம் அறிவித்துள்ளது. அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம், திருச்சி மொரைஸ் சிட்டியில் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு, திருச்சி மைய சேர்மன் சுப்பிரமணி, மாநில செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், செயலாளர் சிவக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திருச்சி செயலாளர் நசுருதீன், பொருளாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள் ஐயப்பன் மற்றும் திரிசங்கு ஆகியோர் பேசுகையில், "ஜல்லி, எம்சாண்ட், கிரஷர் டஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கட்டுமான பொருட்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகிறோம்.

எனவே இனி வரும் காலங்களில் டெண்டர்களை தவிர்ப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஏறத்தாழ 2 ஆயிரம் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குவாரிகள் 8 மணி நேரம் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஏற்கனவே 50 சதவிகித கல்குவாரிகள் மூடப்பட்டு விட்டதால் எம் சாண்ட், ஜல்லி ஆகியவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டு மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது.

ஆகவே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். குவாரிகளை அதிக அளவில் திறக்க வேண்டும். குவாரிகளுக்கு உள்ள கட்டுபாட்டை அரசு நீக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதிக்குள், தமிழகம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், தீர்வு எட்டாவிடில் தொடர் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தீவிரமடையும் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரதப் போராட்டம்; 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details