திருச்சி:சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால், சென்னையில் இன்று (மார்ச் 6) காலை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணியிடம், திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வரும் சவுதாமணி, இதற்கு முன்னர் ஆசிரியையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். மேலும், தற்போது பெண் தொழில் முனைவோராகவும் சவுதாமணி செயல்பட்டு வருகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.
பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, ஏற்கனவே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் தனது 'X' வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.