தமிழ்நாடு

tamil nadu

காவல் நிலையத்தில் மரணம் அடைந்த கவுன்சிலர் விவகாரம்; ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறுவது என்ன? - Avadi Police Commissioner Shankar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 10:53 PM IST

Updated : Apr 22, 2024, 9:26 AM IST

Avadi Police Commissioner Shankar Explanation: ஶ்ரீ பெரும்புதூர் கவுன்சிலர் சாந்த குமார், காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கமளித்துள்ளார்.

Avadi Police Commissioner Shankar Explanation about sriperumbudur councillor santhakumar custodial death
காவல் நிலையத்தில் மரணம் அடைந்த கவுன்சிலர் விவகாரம்: ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறுவது என்ன?

சென்னை:ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வளர்புரம் ஊராட்சித் தலைவரும், பா.ஜ.க பட்டியல் அணி பிரிவு மாநிலப் பொருளாளருமான சங்கர் கடந்தாண்டு ஏப்ரல் 27ல் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார் (30) உள்ளிட்ட 7 பேரை, நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சாந்த குமார் சென்ற போது, நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சாந்தகுமாரை தாக்கியதில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர், செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய பழைய குற்றவாளியான சாந்தகுமார் (30) என்பவர், மற்றொரு பழைய வழக்கான சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளி ஆவார். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி புட்லூர் பகுதியில் பதுங்கி இருந்த சாந்தகுமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் கத்திகள் மற்றும் கைத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

அவரிடம் நடத்திய விசாரணையில், மற்றொரு குற்றச் செயலுக்குத் திட்டம் தீட்டியது தெரிந்தது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின் போது, சாந்தகுமார் நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். இதையடுத்து, சாந்தகுமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சாந்தகுமார் இறப்பு சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை செய்து வருகிறார். விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று அவரை விசாரித்த இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், அவரது இறப்பிற்கான காரணம் பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும். பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கை மற்றும் குற்றவியல் நடுவர் விசாரணை அறிக்கையும் வந்த பின், இவ்வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இன்று (ஏப்ரல் 21) சாந்தகுமாரின் உடலை ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வாணியம்பாடியில் பொய் புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக விசிக போராட்டம் - 50 பேர் கைது! - VCK Protest In Vaniyambadi

Last Updated :Apr 22, 2024, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details