தமிழ்நாடு

tamil nadu

ஒரு கோடிக்கு மேல் நிலுவை வரியை நீக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு.. கரூர் மாநகராட்சி அவசர கூட்டத்தில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 2:30 PM IST

Karur corporation: கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஒரு கோடிக்கு மேல் உள்ள கேட்புத் தொகையை செலுத்த விலக்கு அளிக்க கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி அவசர கூட்டத்தில் பரபரப்பு
கரூர் மாநகராட்சி அவசர கூட்டத்தில் பரபரப்பு

கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் மாநகராட்சி அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் 27வது தீர்மானமாக, கரூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 382 வாடகையை கடைகளுள், ஏலம் எடுக்கப்பட்ட 104 கடைகளில், கண்டறிய இயலாத இனங்கள் மற்றும் ஆறு இரட்டை வரி விதிப்பு, மற்றும் தொகை இல்லாத 117 இனங்கள் என 227 கடைகளை கணினியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு, 1 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்து 577 ரூபாய் கேட்பு தொகையை வசூல் செய்ய விலக்கு அளிக்க மற்றும் கள ஆய்வு செய்து கணினியில் இருந்து நீக்கம் செய்திட மாமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு, காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு மற்றும் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் 24 கடைகள் மட்டும் இடிக்கபட்டதால், மீதமுள்ள கடைகளுக்கு உரிமைதாரர் அல்லது அவர்களின் வாரிசுதாரர்களைக் கண்டறிந்து கேட்புத் தொகையை வசூல் செய்ய வேண்டும் எனக் கூறினர்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர், மாநகராட்சி கூட்ட அரங்கில், கணினியில் இருந்து நீக்கம் செய்து கேட்புத் தொகை உள்ள கடைகளுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், நான்கு பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மீதமுள்ள திமுக உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு 27வது தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால், மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கரூர் மேயராக இருந்த சரவணகுமார், ஏலம் மூலம் கடைகள் நடத்தி வரி நிலுவை வைத்திருந்த முக்கிய புள்ளிகளுக்கு மாநகராட்சி மூலம் நோட்டிஸ் வழங்கி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாற்றம் செய்யப்பட்டார். அவர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களில், கரூர் மாநகராட்சியில் கண்டறியப்படாத இனங்கள் எனக் கூறி, ஒரு கோடிக்கு மேல் உள்ள ரூபாய் வரி கேட்பு தொகையை கணினியில் இருந்து நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details