தமிழ்நாடு

tamil nadu

"அண்ணாமலை கத்துக்குட்டி; தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போய்விடுவார்" - கடம்பூர் ராஜு காட்டம்! - kadambur raju slams annamalai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 10:58 PM IST

Former Minister Kadambur Raju: அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்றும் அவர் தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போய்விடுவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி

"அண்ணாமலை கத்துக்குட்டி.. தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய்விடுவார்" - முன்னாள் அமைச்சர் காட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு மாவட்ட அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வைத்து மாற்றுக் கட்சியினர் 40க்கு மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னணியில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நலக் கூட்டமைப்பு அதிமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "கட்சி யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை அந்தக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணாமலை எல்லா கட்சிகளுக்கும் பஞ்சாயத்து செய்யத் தேவையில்லை. அவர் என்றைக்கு ஜோசியர் ஆனார் என்று தெரியவில்லை.

அவர் முதலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வேலையைப் பார்க்கட்டும். டிடிவி, ஓபிஎஸ் பிரிந்த பிறகு எங்களுடைய நிலைப்பாட்டை முடிவு செய்து ஒற்றை தலைமை தான் அது எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை தொண்டர்கள் அனைத்து நிர்வாகிகள் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் அனைத்தும் ஏற்று முடிவுக்கு வந்துவிட்டது.

2021ல் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்த்து இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று கூறுவது தவறு. 2021ல் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமலிருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். அது தான் நிதர்சனமான உண்மையும் கூட. பாஜக வேண்டாம் என்று காலம் கடந்து எடுத்த முடிவு.

அதிமுகவில் தற்போது எந்த பிரிவும் கிடையாது. 2017ல் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரனால் கோவில்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை. தற்போது டிடிவி தினகரன் நாங்கள் ஒரு தொகுதி தான் கேட்டோம். ஆனால் அவர்கள் இரண்டு தொகுதி கொடுத்துள்ளனர் எனப் பெருமையாகக் கூறுகிறார்.

ஏதோ ஆடித் தள்ளுபடி போல ஒரு சீட்டு வாங்கினால் ஒரு சீட்டு இலவசம் என்ற முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளனர். பாஜக கூட்டணியில் சீட்டு வாங்குவதற்கு ஆள் இல்லை. அதேபோன்று தான் இரண்டு சீட்டு கேட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டுக் கொடுத்துள்ளனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் முழுவதும் திமுகவை எதிர்த்து கடுமையாகப் பேசி வரும் பாஜக, அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. கனிமொழியை எதிர்த்து பாஜக களம் காண தயாராக இல்லை. இதுதான் கள்ளக் கூட்டணி. இதன் ரகசியம் தேர்தலுக்குப் பின்னர் வெளிவரும்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளை எந்த காலத்தில் அழிக்க முடியாது. கனவில் கூட அது நடக்காது. 52 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. அதில் அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சியிலிருந்துள்ளது. 2021ல் ஆட்சி வாய்ப்பினை இருந்தாலும் மக்களின் செல்வாக்கு இழக்கவில்லை. எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்துள்ளனர். டிடிவி தினகரன் ஓபிஎஸ் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அவர்கள் முடிந்து போன விஷயம்.

எங்களை விட்டுப் பிரிந்து போனவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர். இது போன்ற வரலாறுகள் அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. அவர் ஒரு அதிகாரியாக இருந்தவர். அந்த அளவுக்குத் தான் அவர் செயல்படுவார். தேர்தலுக்குப் பின்னர் அண்ணாமலை காணாமல் போய் விடுவார்" எனப் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழர்களை புறந்தள்ளும் பாஜகவுக்கு தேர்தலில் தக்கப்பாடம் புகட்டப்படும்: செல்வப்பெருந்தகை கருத்து - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details