மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இதில் நேரடியாக மறைமுகமாக லட்சக்கணக்கான இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் பெரிய அளவில் இல்லை.
இதனால் தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் பின்தங்கிய பகுதியாகத் தென்மாவட்டங்கள் உள்ளன. மேலும் தமிழக அரசும் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத சூழல் உள்ளது.
ஆகவே, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை அதிகரித்து தொழிற்சாலைகள் துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.