ஈரோடு: தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகத் திகழ்ந்து வருகிறார்.
தற்போது நடிகை த்ரிஷா, இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ்கான் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும்
மலையாளத்தில் தயாராகி வரும் ‘ஐடென்டிட்டி’ என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் டோமினோ தாமஸ் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த சிங்கம் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த மில்லில் பல கோடி மதிப்பில் செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடிகை த்ரிஷா பங்கேற்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. அவர் வந்திருப்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், படப்பிடிப்புத் தளத்தில் குவிந்துள்ளனர். முதலில் அவரைக் காண்பதற்கு படப்பிடிப்பு குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், த்ரிஷாவைப் பார்க்காமல் இங்கிருந்துச் செல்ல மாட்டோம் என்று கூறி, அவரது கேரவனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு நிலவியது.