தமிழ்நாடு

tamil nadu

இளைஞர்கள் பொது இடங்களில் சாதி அடையாளங்களோடு நடமாடுவது வெட்கக் கேடானது: ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின உரை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 11:24 AM IST

Updated : Jan 26, 2024, 12:46 PM IST

Governor RN Ravi: உலகளாவிய பிரச்சனைகளின் தீர்வுகளுக்காகவும், எதிர்காலத்திற்கான வழிகாட்டியாகவும் உலக நாடுகள் நம்மை நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த நன்நாளில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலி மற்றும் வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை பாதுகாத்து, சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்ய தங்கள் இடைவிடாத விழிப்பு, வீரம் மற்றும் தியாகங்களால் சேவை செய்யும் நமது ஆயுதப் படைகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல் துறையின் வீரம் மிக்க படை வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன்.

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னலமில்லா மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கிய தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக் மீனவர்கள் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 ஆகிய விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நமது விஞ்ஞானிகள் மீது தேசம் கொண்டுள்ள பெருமித்தை பகிர்ந்து கொள்கிறேன். சர்வதேச விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்து, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நான் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.

பாரதம் படைத்த சாதனைகள்:தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தியா படைத்த சாதனைகளை குறித்து பேசிய அவர், "உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருவது நமது நாடு. உலக பொருளாதார தரத்தில் 10வது இடத்தில் இருந்து 5வது பெரிய இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் 3வது இடத்தையும் எட்டவுள்ளது.

நமது நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சொந்தமாக 5G இணைய சேவையை அறிமுகப்படுத்திய வெகுசில நாடுகளில் நமது நாடும் ஒன்றாகியுள்ளது. நமது நாட்டில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடற்படையில் சேர்ததன் மூலம், உலகின் சக்திவாய்ந்த கடற்படைகளுள் நாமும் ஒன்றாகியுள்ளோம்.

மேலும், வரலாற்றுச் சிறப்பாக நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், நமது நாட்டின் ஜனநாயக ஆட்சியில் பெண்களை பெருமளவில் பங்கேற்கச் செய்து, உயர்ந்த அளவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள நாடாக திகழ்கிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகளாவிய சுகாதாரம், கல்வி, குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. குறிபாக வீடற்ற ஏழை மக்களுக்காக 40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நமது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி, பல வளர்ந்த நாடுகள் வியக்கும் வகையிலும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளன.

மேலும், 2022ஆம் ஆண்டில், தமிழ்நாடு உலக செஸ் ஒலிம்பியாட்-ஐ சிறந்த முறையில் நடத்தியதன் மூலம், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான நமது திறன் வெளிப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில், ஆர்.பிரக்ஞானந்தா, வைஷாலி ரமேஷ்பாபு, மாரியப்பன் தங்கவேலு, தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சி.ஏ.பவானி தேவி, ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்கள். மேலும், இவர்கள் இந்தியாவை 2047ஆம் ஆண்டிற்குள் விளையாட்டு துறையில் சிறந்த நாடாக மாற்றும் நாயகர்களாகவும் உள்ளனர்" எனப் புகழந்தார்.

உத்வேகம் அளித்த ஸ்ரீராம் லல்லா:தொடர்ந்து அய்யோத்தி ராமர் கோயில் குறிந்த்து கூறும் போது, "அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோயிலில், ஸ்ரீ ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, ஒட்டுமொத்த தேசத்தையும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், நமது நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க புதிய ஆற்றலையும் புகுத்தியுள்ளது.

ஸ்ரீராமருக்கு தமிழ்நாட்டுடன் ஆழமான தொடர்பு உள்ளது. ஸ்ரீராமனின் புராணத்தை சமஸ்கிருதத்திற்கு பிறகு, இந்தியாவின் மற்ற மொழிகளில் சொல்லப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, தீவிர ராம பக்தரும், கவிஞருமான கம்பர் தமிழில் 'இராமவதாரம்' என தலைப்பிட்டு எழுதியது தமிழ்நாட்டில்தான்.

கம்பர் பிறந்த புனிதத் தலமான தேரழந்தூருக்குச் சென்றதை நான் பாக்கியமாக உணர்ந்தேன். கம்பர் மீது உள்ளூர் மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பக்தி என் மனதை தொட்டது. மேலும் ஸ்ரீ ரங்கம் கோயில் வளாகத்தில் உள்ள கம்பர் மணிமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தது எனது பாக்கியம்" என்று கூறினார்.

சிறந்து விளங்கும் தமிழ்நாடு: "கடந்த இரண்டு ஆண்டுகளில், நமது தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, நமது ஆளுமைமிக்க பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நமது பெண்கள், பல சுய உதவி குழுக்களின் மூலம் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அவர்கள் பல வெற்றி கதைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

மேலும், மிகச்சிறந்த மனித வளம், தரமான உள்கட்டமைப்பு வசதி மற்றும் நல்ல தொழில்துறை அடித்தளம் ஆகியவற்றைக் கொண்ட நமது மாநிலம், நாட்டின் வளர்ச்சியின் வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. நமது இளைஞர்கள் மேலும் பல திறன் சார்ந்த கல்வியைப் பெறுவது அவசியம்.

தற்போது நிலவும் வேலை தேடும் மனப்பான்மை மாறி, அவர்களில் அதிகமானோர் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக ஆக வேண்டும். மத்திய அரசின் 'அடல் இன்னோவேஷன் மிஷன்' (Atal Innovation Mission) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேலும் பல புதுமை ஆய்வகங்கள் மற்றும் புத்தாக்க மையங்களை உருவாக்க உதவுகிறது.

நமது மாநில அரசும் இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து அவர்களை ஊக்குவிக்கின்றனர் என்பதை நான் அறிகிறேன்" என்று தெரிவித்தார்.

சாதி அடையாளங்கள் வேதனையளிக்கிறது:மேலும் பேசிய அவர், "நமது நாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. நீண்ட காலமாக வளர்ச்சியில் பின்தங்கிய பல மாநிலங்கள், தெளிவான உறுதியுடன் முன்னேறி வருகின்றன. உலக வணிகங்கள் நமது நாட்டை ஒரு விருப்பமான முதலீட்டு இடமாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய இணைப்பாகவும் பார்க்கின்றன.

மேலும், நாட்டின் வளர்சிக்கான தேசியப் பணியில் நாம் ஒரே குடும்பமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். ஆனால், சமூகப் பாகுபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பற்றி ஊடகங்களி மூலமாக தெரியவருகிறது, அவை மிகவும் வேதனை அளிக்கின்றன. குறிப்பாக, நமது இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் சாதி கைப்பட்டை அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாகவும், வெட்கக்கேடாகவும் உள்ளது.

இத்தகைய நடைமுறைகள் மற்றும் நடத்தைகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை. விரைவில் இதனை விரைவில் ஒழிக்க உணர்வுப்பூர்வமாக செயல்படுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நம் மக்களிடம் மகத்தான, உள்ளார்ந்த மற்றும் நேர்மறை ஆற்றல் உள்ளது. பலர் தங்கள் தனிப்பட்ட முயற்சிகளால் சமுதாயத்திற்கு பெரும் சேவை செய்து வருகின்றனர்.

சிலர் நமது சக குடிமக்களிடையே உள்ள ஏழைகள், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவுகிறார்கள். சிலர் சமூக சொத்துக்களை மேம்படுத்துகிறார்கள். சிலர் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்து மீட்டெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். சிலர் காடுகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்த நற்குணங்கள் நமது மக்களிடையே மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, இதுபோன்ற சேவைகளுக்காக விருதுகளை அறிவித்து, நம் மாநிலத்தில் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் சில அறியபடாத மாவீரர்களை குடியரசு தின விழா வரவேற்பு நிகழ்ச்சியில் இவர்களை கௌரவிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

இது நம் நாட்டின் பொன்னான தருணம். உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்கவும், நீடித்த எதிர்காலத்திற்கான வழியைக் காட்டவும் உலக நாடுகள் நம்மை நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளது. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்கிற உலகை ஒரே குடும்பமாக இந்தியா கருதுவது, உலகளாவிய நம்பிக்கையை நமக்கு பெற்றுத்தந்துள்ளது. நாம் எழுச்சி பெற்று உலகளாவிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, முழுமையான திறன் கொண்ட பாரதத்தை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் குடியரசு தின விழா: களைகட்டிய அணிவகுப்பு.. விருது பெற்றவர்கள் விவரம் உள்ளே

Last Updated : Jan 26, 2024, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details