தமிழ்நாடு

tamil nadu

மக்களவை தேர்தல் விறுவிறுப்பு: ஜனநாயக கடமை ஆற்றிய கின்னஸ் சாதனை பெண் ஜோதி ஆம்கே! - Lok Sabha Election 2024 Phase 1

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 12:27 PM IST

Updated : Apr 19, 2024, 6:03 PM IST

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான கின்னஸ் சாதனை படைத்த பெண் ஜோதி ஆம்கே தனது வாக்கினை நாக்பூரில் செலுத்தினார்.

Etv Bharat
Etv Bharat

மும்பை :முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண் மற்றும் கின்னஸ் சாதனை படைத்தவரான ஜோதி ஆம்கே தனது வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாக்பூர் தொகுதியை சேர்ந்த உலகின் மிகவும் உயரம் குறைவான பெண் என கின்னஸ் சாதனை படைத்த ஜோதி ஆம்கே தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் படித்த பள்ளியிலேயே வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் நாம் நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 30 வயதான ஜோதி ஆம்கே, 62.8 சென்டிமீட்டர் மட்டுமே உயரம் கொண்டவர் ஆவார்.

மிகவும் அரிதான மரபணு பிரச்சினை காரணமாக அவர் சிறு வயது முதலே உடல் வளர்ச்சி இன்றி உயரம் குறைவாக இருந்து வருகிறார். இருப்பினும் உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ராம்டெக், நாக்பூர், பாந்த்ரா- கொண்டியா, கட்சிரோலி-சிமுர் மற்றும் சந்திரபூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ், சிவ சேனா உத்தவ் அணியின் மகாஷ் விகாஷ் அகாடி கூட்டணி சார்பில் விகாஷ் தாக்ரே களம் கண்டுள்ளார். அதிகபட்சமாக நாக்பூர் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சந்திரபூர் தொகுதியில் 15 வேட்பாளர்களும், ராம்டெக் தொகுதியில் 28 பேரும், பந்த்ரா-கொண்டியா 18 பேரும், கட்ச்ரோலி தொகுதியில் 10 பேரும் களம் காணுகின்றனர்.

இதையும் படிங்க :RX 100 பைக்கில் மாஸாக வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி! - LOK SABHA ELECTION 2024

Last Updated :Apr 19, 2024, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details