மும்பை: கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சட்ட விரோதமாக மகாதேவ் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட தளத்தின் துணை செயலியான (Fairplay) பேர்பிளேயில் ஒளிபரப்பியது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதர தமன்னா நோரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி மகாராஷ்டிர மாநில சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப்.29) நடிகை தமன்னா மகாராஷ்டிர மாநில சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராக இருந்த நிலையில், கால அவகாசம் கோரி உள்ளார். மும்பையில் தான் இல்லாத காரணத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வழங்குமாறு நடிகை தமன்னா தரப்பில் கோரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மகாதேவ் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய நடிகர் சாஹில் கான் முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் தங்கியிருந்த சாஹில் கானை கடந்த சனிக்கிழமை கைது செய்ததாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், காவலி எடுத்து விசாரித்து வருகின்றனர்.