தமிழ்நாடு

tamil nadu

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 11:25 AM IST

Updated : Jan 31, 2024, 2:30 PM IST

hemant soren ED Case: ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனன் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Security beefed up at Jharkhand Chief Minister residence ahead of Enforcement Directorate probe
அமலாக்கத்துறை விசாரணையை முன்னிட்டு ஜார்கண்ட் முதலமைச்சர் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ராஞ்சி (ஜார்கண்ட்):நிலக்கரி சுரங்க முறைகேடு, பணமோசடி குற்றச்சாட்டில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகப் பல முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் 8வது முறை சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஹேமந்த் சோரன் இல்லத்தில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஜனவரி 29 முதல் 31 ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் அவருக்குச் சம்மன் அனுப்பினர். ஆனால் அந்த சம்மனுக்கும் ஹேமந்த் சோரன் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளதாகவும், அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து 29ஆம் தேதி டெல்லி விரைந்த அமலாக்கத்துறையினர் ஹேமந்த் சோரன் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அவரது ஓட்டுநரும் ஹேமந்த் சோரன் எங்கு உள்ளார் என தெரியாது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஹேமந்த் சோரனை பல இடங்களிலும் அமலாக்கத்துறையினர் தேடியுள்ளனர். காலை 9 மணிக்கு அங்கு சென்ற அமலாக்கத்துறையினர் இரவு 10.30 மணி வரை ஹேமந்த் சோரனுக்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அமலாக்கத்துறையினர் அங்கிருந்த ஹரியான பதிவு எண் கொண்ட ஒரு பிஎம்டபிள்யூ காரையும், சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை விசாரணைக்குப் பயந்து ஹேமந்த் ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டார் என பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் என்ற முறையில் கவனித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்வார் என ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் முதலமைச்சர் அமலாக்கத்துறை விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகி உள்ளார். அவரது மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க உள்ளார். இதற்காக அவர் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து வருகிறார் என X சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் நேற்று மாலை ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அவரது மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் அவரை விசாரிக்க உள்ளனர்.

இன்று அமலாக்கத்துறை விசாரணையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்படலாம் எனவும், அவரது மனைவி கல்பனா சோரன் முதலமைச்சர் ஆக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் சோரன் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்று ஹேமந்த் சோரன் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பாய் சோரன் பேசுகையில், “எது வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பதற்கு பாஜக மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. அவர்களது முயற்சியில் வெற்றியடைய நாங்கள் விடமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், சோரனை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவர் பாபுலால் மாரண்டி மீது ஜார்கண்ட் முக்தி மோர்சா வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நிஷிகாந்த் துபேவைக் குறிப்பிடும் வகையில், அடிக்கடி ட்விட் செய்யும் பாஜக எம்பி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜார்கண்ட் முக்தி மோர்சா செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 31) ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்திற்கு வந்த அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இன்று ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்யலாம் எனக் கூறப்படும் நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பாதுகாப்பு கருதி முதலமைச்சர் இல்லத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இஸ்ரேலில் பணிபுரிய 5 ஆயிரம் உத்தரபிரதேச தொழிலாளர்கள் தேர்வு!

Last Updated : Jan 31, 2024, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details