தமிழ்நாடு

tamil nadu

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு சொந்தம்? சரத் பவாரின் அடுத்த நகர்வு என்ன? உச்ச நீதிமன்றம் விசாரணை!

By PTI

Published : Feb 18, 2024, 4:49 PM IST

Sharad Pawar: அஜித் பவார் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சரத் பவார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி :மகாராஷ்டிராவில் சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக தரப்பில் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு எதிர்தரப்பில் உள்ள சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும் அவரது அணி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டன.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி அஜித் பவார் மற்றும் சரத் பவார் தனித்தனியே தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதில் அஜித் பவார் தரப்பே உண்மையானது என்றும் கட்சி மற்றும் சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அஜித் பவார் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம், சரத் பவார் முறையிட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சபாநாயகர் ராகுல் நர்வேகர் அஜித் பவார் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் சரத்பவார் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார் என பெயர் ஒதுக்கியது. இந்நிலையில், அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சரத் பவார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சரத் பவார் தரப்பு முறையிட்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை (பிப். 19) விசாரணைக்கு பட்டியலிட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபன்கர் தட்டா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு நாளை (பிப். 19) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :மக்களவை தேர்தல்: மும்முரம் அடையும் "மை" தயாரிப்பு - விரலில் வைக்கப்படும் மையில் இவ்வளவு ரகசியமா?

ABOUT THE AUTHOR

...view details