தமிழ்நாடு

tamil nadu

"26 நாட்கள் எஸ்பிஐ வங்கி என்ன செய்தது?"- உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி! தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ மனு தள்ளுபடி! - Electoral Bond case SBI plea

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 1:01 PM IST

Updated : Apr 3, 2024, 3:30 PM IST

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை வெளியிட கால அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 12ஆம் தேதி வேலைநேர முடிவுக்குள் வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி :தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை வெளியிடக் கோரிய உத்தரவில் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், நாளை (மார்ச்.12) மாலைக்குள் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும், எஸ்பிஐ வங்கி தரும் தரவுகளை தொகுத்து இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர் கவாய், ஜே.பி பர்திவாலா, மற்றும் மனோஜ் மிஸ்ரா அகிய 5 பேர் கொண்ட அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுவது என்பது எஸ்பிஐ வங்கிக்கு ஒன்றும் புதிய வேலை கிடையாது என்றும், இதற்கு முன்பும் இது போன்ற வேலைகளை எஸ்பிஐ வங்கி செய்துள்ளதால் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்து எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த தகவலை திரட்டி வெளியிடுவது கடினமான பணியா என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட சில ஆவணங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது என நீதிபதிகள் கூறினர்.

மீதமுள்ள ஆவணங்களை வெளியிடுவதில் என்ன சிக்கல் உள்ளது என்றும் அதற்காக மட்டும் கால அவகாசம் கேட்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த தகவல்களை வெளியிட 26 நாட்கள் வங்கிக்கு போதாதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கடந்த 26 நாட்கள் வங்கி என்ன செய்து கொண்டு இருந்தது என வினவினர்.

இதையடுத்து நாளை (மார்ச்.12) வேலை நேர முடிவுக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என்றும் அதை மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு எஸ்பிஐ வங்கியின் கால அவகாச மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க :Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!

Last Updated : Apr 3, 2024, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details