தமிழ்நாடு

tamil nadu

திமுகவின் இந்து விரோதப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன் - நிர்மலா சீதாராமன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 3:01 PM IST

Updated : Jan 22, 2024, 5:20 PM IST

Nirmala Sitharaman: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கடும் கண்டனத்தை திமுகவிற்கு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், நாளை (ஜன.22) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். இது மட்டுமல்லாது, மத்திய, மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள், வெளிநாட்டினர் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக அயோத்தி முழுவதும், துணை ராணுவம், காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு பொருட்களும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோரும் அயோத்தியை நோக்கிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் தினமான நாளை, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாஜகவினரால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள், அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கோயில்கள் மட்டுமல்லாது, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்கள், கோயில்களுக்கு வெளியே பொது இடங்களில் ராமர் படம் வைத்து வழிபடவும், அன்னதானம் வழங்கவும் ராம பக்தர்களும், பொதுமக்களும் ஏற்பாடு செய்துள்ளதாக தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வானதி சீனிவாசன், திமுக அரசின் கீழ் இயங்கும் காவல்துறை அவர்களை அழைத்து, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள X வலைத்தளப் பதிவில், “ஜனவரி 22, 2024 ஆன அன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ராமரின் பெயரில் பூஜை அல்லது பஜனை அல்லது பிரசாதம் அல்லது அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்குச் சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்கச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதயத்தை உடைக்கும் செயல்களாக உள்ளன. பஜனைகள் ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல், இனிப்புகள் வழங்கி கொண்டாடுதல் போன்றவற்றிற்காக மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அயோத்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அயோத்தி ராமர் கோயில் நேரடி ஒளிபரப்பின்போது மின்சாரம் நிறுத்தப்படும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுவதாக சொல்லப்படுகிறது.

இது இந்தியா கூட்டணிக் கட்சியான திமுகவின் இந்து விரோத முயற்சி ஆகும். நேரலை ஒளிபரப்பு தடையை நியாயப்படுத்த, தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கூறி வருகிறது. அயோத்தி தீர்ப்பு நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நாளை தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு தடையா? வானதி சீனிவாசன் காட்டம்

Last Updated :Jan 22, 2024, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details