தமிழ்நாடு

tamil nadu

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' தொடர்ச்சியே ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு! - கர்நாடக பாஜக தலைவர் சாடல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 11:18 AM IST

Updated : Mar 2, 2024, 3:54 PM IST

Rameshwaram Cafe Blast: ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

Rameshwaram Cafe Blast
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு

பெங்களூரு:ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், பெங்களூரு விதான்சவுதாவில் 'பாகிஸ்தான் சிந்தாபாத்' என்ற காங்கிரஸ் ஆதரவாளர்களின் கோஷத்தின் தொடர்ச்சி தான் எனவும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும் கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள வைட் ஃபீல்டு (White Field) பகுதியில் பிரபலமான 'ராமேஸ்வரம் கஃபே' உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த உணவு விடுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியவேளையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உணவக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்த நிலையில், தற்போது அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் இது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அது சக்தி குறைந்த குண்டு வெடிப்பு எனத் தெரிவித்தார். இதற்கிடையே, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர், உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய நபர்களையும் மீட்டனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது திட்டமிட்ட குண்டு வெடிப்பு என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லேஸ்வரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் அவசர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு தான், ஒன்றன் பின் ஒன்றாக இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ தான் விடுவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்வர்களின் ஆதரவாளர்கள், விதான்சவுதாவில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சரும், அமைச்சரவையும் அமைதி காத்தனர். ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த இந்த குண்டு வெடிப்பிற்கு, பெங்களூரு விதான்சவுதாவில் 'பாகிஸ்தான் சிந்தாபாத்' என்ற காங்கிரஸ் ஆதரவாளர்களின் கோஷமே காரணம். காங்கிரஸ் அரசியல் கர்நாடக மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம். வாக்கு அரசியலை விட்டுவிட்டு, தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், கர்நாடக மாநிலம் சாந்தி தோட்டாவிலும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாத செயல் நடந்து வருகிறது. வாக்குறுதி என்ற பெயரில் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு காங்கிரஸ் வழிவகுத்துள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!

Last Updated :Mar 2, 2024, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details