புதுச்சேரி: புதுச்சேரி அடுத்து உள்ள ஆரோவில் பகுதியில் உபாசனா என்ற பெயரில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுனாமி தாக்குதலுக்குப் பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை, உலக அளவில் புகழ் பெற்றதாக விளங்கியது.
இந்நிறுவனம், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில், இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் துளசி, சந்தனம், கற்றாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளைக் கொண்டு துணிகளை உற்பத்தி செய்து, அவற்றைக் கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.
இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது. ஆரோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் துவங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் உடைகளை தயாரிக்கிறது. விலை சற்று அதிகம் என்றாலும், உபாசனா உடைகளுக்கென தனி வாடிக்கையாளர்கள் உள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.