டெல்லி:டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும், கட்சியில் இருந்து வெளியேற எம்எல்ஏக்களுடன் பேரம் பேசுவதாகவும், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அவர்கள் டெல்லியில் எங்கள் 7 எம்எல்ஏக்களைத் தொடர்பு கொண்டு, இன்னும் சில நாட்களில் நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்வோம், அதன் பிறகு எம்எல்ஏக்களை உடைப்போம். 21 எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுடனும், மற்றவர்களுடனும் பேசி ஆட்சியைக் கவிழ்ப்போம். நீங்களும் வாருங்கள் உங்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து பாஜக சீட்டில் போட்டியிட வைப்போம்.
21 எம்எல்ஏக்களிடம் பேசி இருப்பதாக அவர்கள் கூறினாலும் எங்களுக்குத் தெரிந்தவரையில் இதுவரை 7 எம்எல்ஏக்களுடன் பேசி உள்ளனர். அதற்கு அவர்கள் அனைவரும் மறுத்து விட்டனர். இதற்கு என்ன அர்த்தம், நான் மதுபான ஊழலையும் விசாரிக்கக் கைது செய்யப்படவில்லை. ஆட்சியை கவிழ்க்க அவர்கள் சதி செய்கிறார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் பல முறை சதி செய்துள்ளனர். ஆனால் அவை வெற்றி பெறவில்லை. கடவுளும் மக்களும் எங்களை ஆதரித்தனர். எங்கள் எம்எல்ஏக்கள் பலமாக ஒன்றிணைந்துள்ளனர். அதனால் இந்தமுறையும் மக்கள் அவர்களது முயற்சியைத் தோல்வியடையச் செய்வார்கள்.
டெல்லி மக்களுக்காக ஆம் ஆத்மி எவ்வளவு செய்துள்ளது என பாஜகவிற்கு தெரியும். பாஜக உருவாக்கிய அத்தனை தடைகளையும் மீறி டெல்லியில் ஆம் ஆத்மி சாதித்துள்ளது. டெல்லி மக்கள் ஆம் ஆத்மியை அபரிமிதமாக நேசிக்கின்றனர். அதனால் தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது எனக்கருதி போலியாக மதுபான ஊழலைக் காரணம் காட்டி கைது செய்து ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே டெல்லியில் அதிகாரம் அரசுக்கா ஆளுநருக்கா என ஏற்பட்ட மோதல் டெல்லி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக தங்களது அரசைக் கவிழ்க்கச் சதி தீட்டுவதாகக் குற்றம்சாட்டி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: "என் அப்பா சங்கி இல்லை" - லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த விளக்கம்!