தமிழ்நாடு

tamil nadu

டெல்லி சலோ; விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 12:22 PM IST

Updated : Feb 14, 2024, 9:23 AM IST

Farmers Protest: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

டெல்லி சலோ போராட்டம்
டெல்லி சலோ போராட்டம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் இன்று 'டெல்லி சலோ' என்ற பெயரில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை டெல்லி மகாத்மா காந்தி இன்ஸ்டியூட்டில் விவசாய சங்கத் தலைவர்களுடன் மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால், சம்யுக்தா கிசான் மொர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மொர்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள், இன்று டெல்லியில் ’டெல்லி சலோ’ என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறை இன்று டெல்லி சலோ போராட்டத்தை தடுக்க பல்வேறு தடைகளை விதித்தது.

அதில் டெல்லியில் ஒரு மாதத்திற்கு பொதுக்கூட்டம் நடத்தவும், மாநகராட்சி பகுதிகளில் டிராக்டர் நுழையவும் தடை விதித்துள்ளது. டெல்லி முழுவதும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியின் ஜரோடா எல்லை, சிங்கு எல்லை ஆகிய பகுதிகளில் சாலையில் பேரிகாட் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்த முயன்றபோது, அவர்கள் மீது போலீசார், கண்ணீர் புகைக் குண்டு வீசியுள்ளனர். மேலும், ஹரியானா மாநிலம் குருக்‌ஷேத்ரா பகுதியில் கான்கிரீட் ஸ்லாப்கள், முள் வேலிகள், பேரிகேட்கள் அமைத்து போலீசார் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க முயன்றனர்.

இது குறித்து டெல்லி போலீசார் ஜாஜர் அர்பித் ஜெயின் கூறுகையில், “இப்பகுதியில் 11 நிறுவனங்கள் உள்ளது. இங்கு போராட்டத்தினால் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படக்கூடாது என்பதால் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், டிரோன் கருவி மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து வருவதாகவும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி, நொய்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா?" - பீகார் சட்டப்பேரவையில் தேஜஸ்வி அதிரடி!

Last Updated : Feb 14, 2024, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details