ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் சோனியா காந்தி, நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைப்பதாகவும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தி பாஜகவில் இணைய வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதித் திட்டம் நடப்பாதாகவும், நாடும் நாட்டின் ஜனநாயகமும் ஆபத்தில் இருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை, அடக்குமுறைகளை அதிகரிக்கச் செய்ய எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
தன்னை மிகப் பெரியவர் என நினைத்துக் கொள்ளும் மோடி, தேசத்தின் மாண்பையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார் என்றும் அநீதிக்கு எதிராக அனைவரும் போராடி நியாயம் காண வேண்டும் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார். நம் முன்னோர்கள் தங்களது கடும் போராட்டத்தின் மூலம் நாட்டுக்கு சுதந்திரத்தை தேடித் தந்தை நிலையில், தற்போது இந்த ஆட்சி தியாக தீபத்தை மங்கச் செய்ததாக சோனியா காந்தி கூறினார்.