Viral Video: அடம் பிடித்த அண்ணன்.. அழைத்துச் சென்ற தங்கை.. பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாஸ்மார்பெண்டா மட்டுமின்றி, அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். முன்னதாக, கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு காலதாமதம் ஆனது.
இதனையடுத்து கோடை விடுமுறை நீட்டிப்புக்குப் பின்பு, ஜூன் 14 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 1ஆம் வகுப்பு மாணவன் பிரதீஷ் (5) பள்ளிக்குச் செல்வதற்கு அடம் பிடித்து அழுதுள்ளார். அவரை அவரது பெற்றோர் சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
இருப்பினும், அது பலன் அளிக்கவில்லை. ஆனால், மாணவர் பிரதீஷின் 3 வயதான தங்கை, அவரது அண்ணனின் கைகளைப் பிடித்து பாசமாக பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச் சென்று விட்டுள்ளார். இது அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.