விருதுநகர்: சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டி கிராமத்திலுள்ள விநாயகா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே பட்டாசு தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் தீக்காயம் ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து
சிவகாசியைச் சேர்ந்த பிரம்மன் என்பவருக்குச் சொந்தமான விநாயகா பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு தொழிற்சாலையில் நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(மார்ச்.7) மாலை பட்டாசு தொழிலாளர்கள் வேலை முடிந்து பேக்கிங் செய்யும் நேரத்தில் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரை மட்டமானது. இதில் அங்கு பணிபுரிந்த சாத்தூர் அருகிலுள்ள அமீர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (26) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த ராமர் (19) என்பவர் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டாசு வெடி விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அப்பாவால் உயிருக்கு ஆபத்து - காதல் திருமணம் செய்த அமைச்சரின் மகள்!