விருதுநகர் மாவட்டம் வி.முத்துலிங்கபுரம் ஊராட்சியில் காளிராஜ் (38) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில், 40 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வேலைபார்த்துவருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது ஆலையைச் சுற்றியிருந்த புற்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக தன் கட்டுப்பாட்டை இழந்து, பட்டாசுகள் வைத்திருந்த அறையில் மோதியது.
இந்த விபத்தில் ஆலை கட்டடத்தில் இருந்த ஐந்து அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் அதனை ஆய்வு செய்தார். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி