தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைப் பொதுத்தோ்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகா் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு சாத்தூர் ஆா்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது.
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான புஷ்பா தலைமையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த ஒருநாள் பயிற்சி வகுப்பில் 27 மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்சி வகுப்பில், வாக்குப்பதிவின்போது மண்டல அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் துணை அலுவலரும், சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், அரசு அலுவலா்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 283 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 28 வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்தப் பயிற்சி வகுப்பில் 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அஞ்சல் வாக்களிப்பது சம்பந்தமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அஞ்சல் வாக்கு போடச்சொல்லி அவர்களைத் துன்புறுத்தக்கூடாது, அஞ்சல் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட கட்சி, தனிப்பட்ட நபர்களிடம் மொத்தமாக ஒப்படைக்கக் கூடாது போன்ற அறிவுரைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் சட்டப்பேரவைத் தோ்தலை நேர்மையாக நடத்தி முடிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்!